சிங்கப்பூரில் ஏராளமான வெளிநாட்டவர்கள், குறிப்பாக இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்கு வெளிநாடடவர்கள் தங்கிப் பணி புரிவதற்கான வேலை பெர்மிட்டைப் பெற குறைந்தது மாதம் 2800 சிங்கப்பூர் டாலர் சம்பளம் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட சில விதிமுறைகள் உள்ளன. தற்போது இந்த விதிமுறையை இறுக்கி விட்டது சிங்கப்பூர் அரசு.
அதன்படி வேலை பெர்மிட் பெற விரும்பும் வெளிநாட்டவர்கள், மாதம் 3000 சிங்கப்பூர் டாலர் சம்பளமாக பெற வேண்டும். அதற்குக் குறைவாக சம்பளம் பெற்றால் வேலை பெர்மிட் கிடைக்காது. நாடு திரும்ப வேண்டியதுதான். இந்த உத்தரவை 2012ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப் போவதாக சிங்கப்பூர் அரசு கூறியுள்ளது.
சிங்கப்பூர் அரசின் இந்தப் புதிய கெடுபிடியால் கடுமையாக பாதிக்கப்படப் போவது இந்தியர்கள்தான். காரணம், இந்தியர்கள்தான் பெருமளவில் சிங்கப்பூரில் பணியாற்றுகின்றனர். அதிலும் 3000 டாலருக்குக் கீழ் சம்பளம் வாங்கக் கூடிய வேலைகளில் அதிகம் இருப்பவர்கள் இந்தியர்கள்தான். அவர்கள் அத்தனை பேரும் நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் 3800 இந்திய நிறுவனங்கள் உள்ளன.இங்கு பெரும்பாலும் இந்தியர்கள்தான் அதிகஅளவில் பணியாற்றுகின்றனர். மேலும் சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவீதம்பேர்தான் சிங்கப்பூர் குடிமக்கள். மீதமுள்ள 35 சதவீதம் பேரும் வெளிநாட்டவர்களே.
வெளிநாட்டவர்கள் பெருமளவில் சிங்கப்பூரில் வேலை பார்க்க வருவதால் உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பு பறி போவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்தே இந்த நடவடிக்கையை சிங்கப்பூர் அரசு மேற்கொண்டுள்ளது. இருப்பினும் சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெற்று பணியாற்றுவோருக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் கூறுகையில், உள்ளூர்வாசிகளின் நலனையும் நாம் பாதுகாக்க வேண்டியுள்ளது. எனவேதான் இந்த மாற்றம் என்று தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக