"இடியட் பாக்ஸ்' என்று அழைக்கப்படும் தொலைக்காட்சியை அதிகம் பார்த்தால் இளம் வயதில் மரணம் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிக நேரம் டிவி பார்ப்பதினால் சர்க்கரை நோய், இதய அடைப்பு மற்றும் இளம் வயதில் மரணம் ஆகியவை ஏற்படும் என்று அமெரிக்காவிலுள்ள "ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்' என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளது.
ஒரு நாளில் 2 மணி நேரத்துக்கு அதிகமாக டிவி பார்த்தால் சர்க்கரை வியாதி வரும் என்றும், 3 மணி நேரத்துக்கு அதிகமாக டிவி பார்த்தால் இதய அடைப்பு ஏற்படும் என்றும், அதிக நேரம் டிவி பார்த்தால் இளம் வயதிலேயே மரணம் சம்பவிக்கும் என்றும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் பிராங்க் ஹு மற்றும் கிராண்ட்வெட் ஆகியோர் தெரிவித்தனர்.
இந்த ஆராய்ச்சிகளின் நோக்கம் உடலுழைப்பை அதிகப்படுத்தச் சொல்வது மட்டுமில்லாமல், டிவி பார்ப்பது போன்ற சோம்பேறித்தனமான செயல்களில் அதிக நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் தீமைகளை எடுத்துச் சொல்வதுதான் என்று பிராங்க் தெரிவித்தார்.
அதிகம் டிவி பார்ப்பதால் சர்க்கரை வியாதியோடு உடல் பருமனும் ஏற்படும் என்று கிராண்ட்வெட் தெரிவித்தார். 1970-லிருந்து 2011 வரை டிவி பார்ப்பது தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளையும் கருத்தில் கொண்டே இவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
அனைத்திலும் முன்னிலை வகிக்கும் அமெரிக்கர்கள் டிவி பார்ப்பதிலும் முன்னிலைதான். ஒரு நாளில் அமெரிக்கர்கள் 5 மணி நேரம் டிவி பார்ப்பதாகவும், ஐரோப்பியர்கள் 3-லிருந்து 4 மணி நேரம் டிவி பார்ப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மணிக்கணக்கில் டிவி பார்ப்பதால் நோய்கள் வரும் என்ற இந்த ஆராய்ச்சி முடிவுகள் குறித்து , நாள் முழுவதும் "மெகா சீரியல்களைப்' பார்த்து அழும் நம்மவர்கள் யோசித்துப் பார்ப்பார்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக