Loading

சனி, 26 மார்ச், 2011

இன்று பூமிதினம் (‘எர்த் அவர்’)



Warid-Supports-Earth-Hour-2011-300x233
உலகில் சுற்றுசூழல் மீதான அத்துமீறல் வரம்பு மீறிய சூழலில், இயற்கை பேரிடர்கள் தொடர் கதையாகும் வேளையில்  128 உலக நாடுகள் மரணித்துக் கொண்டிருக்கும் பூமிக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இன்று ‘பூமி தினம்’(எர்த் அவர்) கடைப்பிடிக்கப்பிடிக்கின்றன.

இதையொட்டி இன்று இரவு 8.30 மணி முதல் ஒரு மணி நேரம் மின் விளக்குகள் மற்றும் மின் சாதனங்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி கடைப்பிடிப்பதன் நோக்கம், பூமியின் இயற்கை சுற்றுச்சூழல் அழியாமல் பாதுகாக்கவும், புவி வெப்ப அதிகரிப்பின் அபாயத்தை உணர்த்தவுமாகும். மேலும், இயற்கையுடன் இணைந்து மக்கள் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடாகியுள்ளது.


அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளைச் சார்ந்த மக்கள் சுயமாகவே இந்நிகழ்ச்சியில் மின்சாரத்தை ஒருமணிநேரம் நிறுத்திவிட்டு பங்கேற்பர்.

உலகின் வானுயர்ந்த கட்டிடங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன. இன்று இரவு யு.ஏ.இ நேரம் 8.30 முதல் 60 நிமிடங்கள் உலகின் மிக உயர்ந்த கோபுரமான துபாயிலுள்ள புர்ஜ் கலீஃப் கண்ணை மூடிக்கொள்ளும்.

ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். இச்சூழலில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

இயற்கைக்கு முரணான அணுசக்தியை உற்பத்திச் செய்யும் உலைகள் புகுஷிமாவில் வெடித்ததால் அந்நாட்டு மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

எப்பொழுது அணுக் கதிர்கள் பரவுமோ என்ற பீதி அவர்களின் உள்ளத்தை அலைக்கழிக்கிறது. உலகம் மீண்டும் அணு விபத்தை எதிர்நோக்கியுள்ள சூழலில் உலக பூமி தினம் நம்மை கடந்து செல்கிறது.

உலக அளவில் புகை மாசுவை அதிக அளவில் வெளிப்படுத்தும் நாடுகளில் முன்னணியில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

பசுமை இல்ல வாயுக்களை அதிக அளவில் நாமும் வெளியேற்றி வருகிறோம். இந்தியாவில் மின்சாரத்தின் மூலமான கார்பன் மாசுக்கள்தான் அதிக அளவில் வெளியேறுகின்றன. அதாவது பாதி புகை மாசு மின்சாரத்தால்தான் ஏற்படுகிறது.

இந்தியாவின் 80 சதவீத அளவிலான மின்சாரம் நிலக்கரியிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அணுசக்தியால் ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகு நமது இந்திய அரசு வெளிநாட்டு உதவியுடன் மஹாராஷ்ட்ரா மாநிலம் ஜெய்தாப்பூரில் லட்சம் கோடி செலவில் அணுசக்தி நிலையத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு சுயநலனுக்காகவும்,அந்நிய சக்திகளின் நிர்பந்தத்தாலும் இயற்கைக்கு முரணான பல காரியங்களை நமது அரசு நிறைவேற்றி வருகிறது.

இயற்கைக்கு முரணான முன்னேற்றமும், வளர்ச்சியும் ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த எதிர்காலத்தை மட்டுமல்ல வரும் தலைமுறைகளின் வாழ்க்கையையும் கேள்விக் குறியாக்கிவிடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக