Loading

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

சீன சட்டமன்ற உறுப்பினருக்கு லஞ்சத்தால் மரண தண்டனை!


சீன நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான லியோனிங்கில் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்த சாங் யாங் (56) லஞ்சம் வாங்கிக்கொண்டு சலுகைகளை அளித்ததற்காக மரண தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே சமயம் தண்டனையை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டது.

மாகாண சட்டமன்றத்தின் நிலைக்குழு ஒன்றில் துணைத் தலைவர் பதவி வகித்த சாங் யாங், 23 தனி நபர்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் அரசாங்க ஒப்பந்தங்களை வாங்கிக்கொடுத்தார், கடன் வாங்கித் தந்தார், அரசு ஊழியர்கள் சிலருக்குப் பதவி உயர்வும் பெற்றுத்தந்தார்.


இதற்கு பிரதிபலனாக 16 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு இணையான சீன யுவான் நாணயத்தை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டார்.

லஞ்சப் புகாரின்பேரில் அதிகாரிகள் அவரை விசாரித்தபோது அவர் எதையும் மறைக்காமல் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் லஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தை (செலவழித்தது போக மீதி) பைசா திருத்தமாக ஒப்படைத்துவிட்டார்.

அவர்கள் விசாரித்த புகார்களைத் தவிர, அவர்களுக்கே தெரியாத வேறு பல முறைகேடுகளையும் லஞ்சத்தையும் தானாகவே தெரிவித்தார். இதனால் அவருடைய மரண தண்டனையை 2 ஆண்டுகள் ஒத்திவைத்திருக்கிறார்கள்.

இவர் சிறையில் திருந்தி நல்லவராக இருந்தால் தண்டனை மேலும் குறைக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது என்று தெரியவருகிறது.

தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக