Loading

புதன், 10 நவம்பர், 2010

இந்தியாவின் சிறார் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை ஒரு பார்வை


STOP CHILD ABUSE AND SEXUAL HARASSMENTஉலகின் சிறுவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவில் தான் 19 சதவீதம் சிறார்கள் இருக்கின்றனர். அதே போன்று உலகின் மூன்றில் ஒரு இளையவர்கள் ( 18 வயதுக்கு குறைந்தவர் ) வாழும் நாடு இந்தியா. இவர்களில் 50 சதவீதமானவர்கள் உரிய பாதுகாப்பும், பராமரிப்பும் இன்றி வாழ்கின்றனர். டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் அக்டோபர் 26ல் வெளியானக் கட்டுரை ஒன்ரில் ஆஷிஸ் ரே எழுதுகிறார் இந்தியாவில் 50 சதவீதம் சிறுவர்கள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகி இருப்பதே.
இந்த தொகை அவ்வளவு சாதரண விசயம் இல்லை. இந்தியாவில் சிறார்களின் நிலைமைகளை கண்டறிய நடத்தப் பட்ட கணிப்புக்கள் குறைத்து மதிப்பிட முடியாத அளவிலானது. ப்ளான் இன்டர்நாசனல் என்ற 70 ஆண்டுகளாக இயங்கி வரும் குழந்தைகளுக்கான அமைப்பு நடத்திய நாடளவிய ஆய்வின் படி பிள்ளைகளுக்கு கொடுமையான தண்டனைகள் கொடுக்கும் 13 நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது என்கிறது, மற்ற இரு நாடுகள் ஐக்கிய அமெரிக்க மாநிலமும், பிரேசிலும் ஆகும். அதே அமைப்பு சொல்லும் இன்னொரு விசயம் இந்தியாவின் பெரும்பாலான, சொல்லப் போனால் அனைத்துப் பள்ளிகளிலும் ஏதோ ஒரு வகையில் பிள்ளைகள் துன்புறுத்தப் படுகிறார்கள். இவற்றில் 65 சதவீதத்துக்கும் அதிகமான பிள்ளைகள் அடித்தும், உதைத்தும் துன்புறுத்தப் படுகிறார்கள். இத்தகைய துன்புறுத்தல்கள் அரசு பள்ளிகளிலேயே அதிகம் என்பதும் வேதனைத் தரும் விசயமாகும்.
அந்த அமைப்பின் மேற்கொண்ட ஆய்வின் படி பொதுவான துன்புறுத்தல்கள் சாதிய துன்புறத்தல்களும், பாலின வேறுபாட்டால் வரும் துன் புறுத்தல்களுமே ஆகும். இந்திய பள்ளிகளின் இந்த செயலால பல மாணவர்கள் பகடிவதை, மனச்சோர்வினால் பள்ளிகளில் இருந்து நின்றுவிடுகின்றனர். பல நேரம் பள்ளிகளில் பிள்ளைகள் தடி மற்றும் பிரம்பால் அடிக்கப்பட்டும், இருக்கைகளில் கட்டி வைத்தும், மணிக்கனக்காக வெயிலில் தொடர்ந்து நிற்க வைத்தும், சில நேரங்களில் ஆடை அவிழ்த்து நிற்கும் படியான மிகவும் கொடுமையான தண்டனைகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடுப்பதாக தெரிகிறது.
இந்த வகை தண்டனைகளை தவறு என்றும், இதனால் பிள்ளைகளின் மனநிலைப் பாதிக்கும் என்றும் போதிய அளவு விழிப்புணர்வு ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஏனையவர்களுக்கும் இல்லாது இருப்பது வேதனை ஆன விசயம் என அந்த அமைப்பு கூறுகிறது. இன்னொரு ஆய்வின்படி சராசரியாக ஒவ்வொரு இந்திய மாணவனும் பள்ளிகளில் தினமும் ஐந்து அடிகள் வாங்குகின்றானாம்.

இந்தியாவில் சிறார் பாலியல் வன் கொடுமை :

2007ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்தியாவின் சிறார் பாலியல் வன் கொடுமை ஆய்வின்படி, சிறார் பாலியல் வன் கொடுமையைப் பற்றி பேசவே பலரும் தயங்குகின்றனராம். எழுத்தாளர்கள் மரு.லௌலீன் காக்கர், சிறீநிவாஸ் வரதன் மற்றும் ப்ர்வேஷ் குமார் ஆகியோரின் ஆய்வின் படி கூறப்படுவது என்னவென்றால், ” சிறார் பாலியல் வன் கொடுமையைப் பற்றி பேசுவதில் மிகுந்த தயக்கமும், அமைதியும் காணப்படுகிறது, பெருவாரியான மக்கள் இது ஏதோ மேற்கு நாடுகளில் நடப்பதைப் போன்றும், சிறார் பாலியல் வன் கொடுமை இந்தியாவில் நடக்காதவைப் போன்றும் எண்ணுகிறார்கள், ஆனால் உண்மை என்ன்வோ நேர்மாறாகவே இருக்கிறது”, என்கின்றனர்.
அந்த ஆய்வின் படி பல இந்திய குடுமபங்கள் பாரம்பரியம், சமுதாய கௌரவம் என்றப் போர்வையில் இதனைப் பற்றிப் பேசுவதே இல்லை. இப்படி அமைதியாக இருப்பதால் தான் பிள்ளைகள் பாலியல் வன்கொடுமை அரங்கேறுவதற்கு வழிவகை செய்கிறது, அது குற்றம் செய்பவரை மேகும் குற்றம் செய்ய தூண்டுகிறது. சிறார் பாலியல் வன் கொடுமை சார்ந்த போதிய அறிவு இல்லாததால் பல பிள்ளைகள் தமது உரிமை எதுவென் அறியாமலயே வளர்கின்றனர்.
இந்த 2007ல் பெண்களின் சிறுபிராய பாலியல் துன்புறுத்தல்களும், நெருங்கிய உறவினர்களால் ஏற்பட்ட பாலியல் வன் கொடுமைப் பற்றிய ஆய்வினை புது தில்லியில் இருக்கும் RAHI என்னும் அமைப்பு நடத்தியது. இந்த ஆய்வின் போது சில பெண்கள் தாங்கள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகி இருப்பதையே அறியாமல் இருந்திருக்கின்றனர். அவர்கள் சிறுவயதில் ( அப்பா தானே, மாமா தானே, அண்ணன் தானே ) என இருந்து உள்ளனர். ஆனால் அச்செயலால் அவர்கள் அடைந்த மனச்சிதைவு பிற்காலத்தில் அவர்களின் வாழ்வை கடுமையாக பாதித்து உள்ளது எனலாம். அவர்கள் அந்த துன்பகரமான நிகழ்வினை யாரிடமும் சொல்லாமலும் மறைத்து வெட்கப்பட்டு இருந்துள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.
அந்த அமைப்பு நடத்திய ஆய்வின்படி நகரம், கிராமம் என எல்லா இடங்களிலும் கலந்து கொண்ட பெண்களில் 76 சதவீதமான பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். அவற்றில் 40 சதவீதமானவர்கள் Incest ( இரத்த உறவிலானோர் கொடுக்கும் ) எனப்படும் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகி இருக்கின்றனர்.
பெரும்பாலான பிள்ளைகள் வீட்டிலேயே பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருப்பது என்னும் செய்தி நம்மை அதிர்ச்சியடைய செய்கிறது. இதில் ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என்ற பேதமே இல்லை எனலாம்.
2006ம் ஆண்டு ஜனவரியில் மும்பை மருத்துவமனை ஒன்றுக்கு விரல்கள் கடுமையாக உடைக்கப்பட்ட நிலையில் 12 வயது பெண் பிள்ளை அனுமதிக்கப்பட்டால். அவள் பள்ளியில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் என்பதற்காக அவளின் தந்தையே அவளது விரல்களை உடைத்து இருக்கிறார்.
2007ல் புது தில்லியில் பள்ளியொன்றில் 16 வயது மாணவியின் அந்தரங்க உறுப்புகளில் ஒரு ஆசிரியர் தொட்டும், தடவியும் பாலியல் கொடுமை புரிந்ததாக செய்திகள் வந்தன. அந்தப் பெண்ணின் பெற்றோர் இதனை அறிந்து பள்ளியில் புகார் கொடுத்தப் போது, இது பள்ளியின் பெயருக்கு அவமானம் ஏற்படும் என்றுக் கூறி அந்தப் பெண்ணை பள்ளியில் இருந்தே நீக்கிவிட்டனர் பள்ளி நிர்வாகம். இந்தப் பெண்ணின் கதை ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்று தான். இந்த மாதிரி சம்பவங்கள் நாடு முழுதும் நடந்துக் கொண்டே தான் இருக்கின்றன.
இப்படியான தொடுதல் பல நேரங்களில் தாயும், தந்தையும், மாமனும், மாமியும், சித்தப்பன், பெரியப்பன், சித்தி, பெரியம்மா, அண்ணன், ஒன்று விட்ட அண்ணன், தாத்தா, வீட்டு தோழர், வீட்டுப் பணியாளார், மதகுருமார் என அனைவராலும் நிகழ்த்தப்படுகிறது. ஒரு ஆய்வின் படி பாட்டியைத் தவிர அனைத்து உறவுகளாலும் பிள்ளைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருப்பது அதிர்ச்சி தருகின்றது.
பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி சொல்லிக் கொடுப்பது நல்லது. யாராவது தன்னை கெட்ட தொடுதல் செய்யும் பட்ச்சத்தில் அவற்றை மனம் விட்டு சொல்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படல் வேண்டும். அதே சமயத்தில் கூச்சல் இடவும், தன்னைத்தான் காப்பாற்றிக் கொள்ளவும் தெரிய வேண்டும்.
பள்ளிகளில் பாலியல் கல்வி மிகவும் அவசியமானது ஒன்றாகும். இந்தியாவில் பாலியல் கல்வி என்ற உடனேயே ஆண், பெண் புணர்வதைத் தான் சொல்லிக் கொடுக்கப் போகிறார்களோ என்று எண்ணி கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது நம் பிள்ளைகள் தான். நெதர்லாந்து நாட்டில் பள்ளிகளில் பாலியல் கல்வி அறிமுகம் செய்த பின்னர் பள்ளிகளில் இருந்த 60 சதவீதமான திருமணத்துக்கு முன் ஏற்படும் கருத்தரிப்புகள் 25 சதவீதமாக குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
அண்மையில் விஜய் டிவியின் நீயா நானவில் ஒரு தந்தையே பெற்ற மகளை பாலியல் கொடுமை செய்து இருப்பது கண்டு மிகுந்த அதிர்ச்சியடைய நேர்ந்தது. கன்னியாகுமாரியிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தேறி உள்ளது. சில தினங்களுக்கு முன் கோவையில் கடத்திக் கொள்ளப்பட்ட முஸ்கின், இரு நாள்களுக்கு முன் மூன்று வயது குழந்தையிடம் நடத்திய பாலியல் கொடுமை என தமிழ்நாடு ஒன்றும் சளைத்தது இல்லை என நிரூபித்து உள்ளனர். அண்மையில் இணையத்தில் ஒரு பெண் ஐந்து வயது சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்யும் காணொளியினை காண நேர்ந்ததாக எனது தோழர் தெரிவித்தார். அக்காணொளி இந்தியாவில் படமாக்கப்பட்டு இருந்தது மேலும் அதிர்ச்சி தருகிறது. இத்தகு செயலில் ஈடுபடுபவர்களை கைது செய்யவோ, தடுக்கவோ நம் நாட்டில் ஒன்றையும் புடுங்க முடியாமல் இருப்பது வேதனை தருகிறது.

என்ன செய்யலாம்:

பெற்றோர் எப்போதும் அனைவரின் மேல் ஒரு சந்தேக கண் வைப்பது நல்லது.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதலை சொல்லிக் கொடுங்கள்.
தினமும் பள்ளியில் என்ன நடந்தது என பிள்ளைகளிடம் பேசுங்கள். எந்த தவறு நடந்தாலும் பிள்ளைகளை திட்டாமல், பொறுமையாக தவறு எங்கே என தெரிந்து கொள்ளுங்கள்.
பிள்ளைகளை பயமுறுத்தி வளர்க்க வேண்டாம். அவ்வாறு வளர்வதால் அவர்கள் பெற்றோரிடம் மனம் விட்டு பேச அச்சப்படலாம். வீட்டிலேயே வெளியிலேயே தவறு நடக்கும் பட்சத்தில் பிள்ளைகள் பெற்றோரிடம் மனம் விட்டு பேசுவதை தவிர்க்கலாம். தங்களில் பிரச்சனைகளை மனதில் வைத்து புழுகி அவர்களின் மனம் மேலும் பாதிப்படையும்.
தவறுகள் நடந்தால் பிள்ளையைக் கண்டிக்காமல் மன நல மருத்துவரிடம் கொண்டு செல்லுங்கள், தவறிழைத்த நபர் மீது சட்ட ரீதியான புகாரைப் பதிவு செய்யுங்கள்.
பதின்ம வயதில் இருக்கும் பிள்ளைகளின் தோழர்களோடும் நட்பைப் பேணுங்கள், வீட்டுக்கு வரவழைத்து நட்பைப் பேணவும். இது உங்கள் பிள்ளைகளைப் பற்றி அறிந்துக் கொள்ள மேலும் உதவும்.
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் மட்டும் தான் பிள்ளைகள் இல்லை. உங்கள் அக்கம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் துன்புறுத்தப்படுவதை அறிந்தால். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலோ, குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் கொடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக